Saturday, May 10, 2014

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு - சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம்  செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias)  என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்  சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை  நேரில்பெற  விருப்பம்  தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்  அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர்  18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார்  அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm>  என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm>  என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in

கட்டணம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in  என்ற தளத்தைப் பார்க்கவும்.

ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?
தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.  

மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

ஜாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் துணை வட்டாட்சியருக்கும், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் கோட்டாட்சியருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி?
ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் பத்து ரூபாய்  நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை.

விண்ணப்பத்துடன் வருமானத்திற்கான ஆதாரம் குறித்து எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.  

குறிப்பு:
வருமானச் சான்றிதழ் தவிர ஜாதிச் சான்றிதழுக்கோ எவ்விதக் கட்டணமுமில்லை.

பள்ளி / கல்லூரி ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணப்பிக்காமல் முன்னரே விண்ணப்பித்து பெற்றுவைத்துக் கொள்வது நல்லது.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்தால் அலைச்சல் மிச்சம். காத்திருக்க வேண்டிய அவசியம் மட்டுமல்ல. நேரமும் வீணாவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் கூட தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ செய்யலாம். தளத்துக்குச் செல்ல http://tnvelaivaaippu.gov.in/Empower

பொதுவாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பதிவுக்காக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர். இதனால் காத்திருப்பு, காலதாமதம், நேரம், அலைச்சல் அனைத்துமே தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதி ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஜாதி விவரம், குடும்ப அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங்களை பதிவுசெய்து அப்போதே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

இதன்படி ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது காலதாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களிடம் முன்கூட்டியே விவரங்கள் பெற்று கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும்,  மதிப்பெண்  சான்றிதழ் எண் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் மே 2-ஆம் தேதிக்குள் சேகரிக்க வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அந்த எண்ணை மட்டும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதன்படி வெவ்வேறு நாட்களில் பதிவு செய்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

UGC NET கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு எழுத விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (ஜே.ஆர்.எஃப்) நிதி உதவி பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தகுதி: இந்த நெட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கலைப்பாடங்கள், மொழியியல், மானுடவியல், சமூகவியல் கணிப்பொறியியல்,  எலெக்ட்ரானிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களும், தேர்வு முடிவிற்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

வயது வரம்பு: ஜே.ஆர்.எஃப். எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதி தேர்வை எழுதும் பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓ.பி.சி. மாணவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பணியில் சேரவேண்டி நெட் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

தேர்வு முறை: மூன்று தாள்களைக் கொண்ட இத்தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இருக்கும்.

முதல் தாளில் பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், தர்க்கரீதியான கேள்விகள், ரீசனிங் எபிலிட்டி, டீச்சிங்  எபிலிட்டி குறித்து 60 கேள்விகள் இருக்கும். இதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால், முதல் 50 கேள்விகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இதற்கு மொத்தம் நூறு மதிப்பெண்கள். முதல் தாளில் உள்ள கேள்விகளுக்கு 75 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டும். இரண்டு மற்றும் மூன்றாம் தாளில் விண்ணப்பதாரர் தேர்வு செய்த பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதற்கு மொத்த மதிப்பெண்கள் 100. மூன்றாம் தாளில் 75 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்கள். இரண்டு மற்றும் மூன்றாம் தாள்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வின் முடிவில் ஒவ்வொரு பாட வாரியாகவும், பிரிவு வாரியாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள முதல் 15 சதவீதத்தினர், இத்தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஜே.ஆர்.எஃப். தகுதி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தனியே இணையதளத்தில் வெளியிடப்படும். .

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் புதுச்சேரியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும் தேர்வு மையங்களாகச் செயல்படும். இந்தப் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடும் கல்லூரிகளில் மாணவர்கள் நெட் தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.450. ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.225. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.110. வங்கிச்சேவைக் கட்டணம் தனி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தபின், கொடுக்கப்படும் வங்கிச் செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் (மற்றும் இதர சான்றிதழ்கள் தேவைப்படின் அவற்றையும்) இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் தேர்வு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5, 2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: மே 7, 2014

விண்ணப்பப் படிவம், ஹால் டிக்கெட், அட்டெனென்ஸ் ஸ்லிப் ஆகியவற்றை பிரிண்ட் அவுட் எடுக்க கடைசி தேதி: மே 10, 2014

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக தேர்வுமையங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: மே 15, 2014

தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29, 2014

விவரங்களுக்கு: www.ugcnetonline.in


நெட் தேர்வு இலவசப் பயிற்சி தேதி நீட்டிப்பு

நெட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.)  இலவசப் பயிற்சியை நடத்துகிறது. இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: 044-2539 9418, 2539 9518

மெரைன் என்ஜினீயரிங், நாட்டிக்கல் சயின்ஸ் பொது நுழைவுத் தேர்வு

இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் மெரைன் என்ஜினீயரிங், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் மும்பையில் டிரெயினிங் ஷிப் -சாணக்கியா, லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்வான்ஸ்ட் மெரிடைம் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச், மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆகிய கல்வி நிறுவனங்களும் கொல்கத்தாவில் மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போர்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய கல்வி நிறுவனங்களும் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர், சென்னையில் உள்ள நேஷனல் மெரிடைம் அகாதெமி ஆகிய அமைப்புகள் தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக உள்ளன. கொச்சி, கண்ட்லா, காரைக்கால் ஆகிய நகரங்களில் புதிய வளாகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, 36 கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிடெக் (மெரைன் என்ஜினீயரிங்), பிடெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), பிஎஸ்சி (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்), பிஎஸ்சி (மேரிடைம் சயின்ஸ்), பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (இதைப்படித்து விட்டு பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்) ஆகிய இளநிலைப் படிப்புகளும் எம்பிஏ (போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்), எம்பிஏ (இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக் மேனேஜ்மெண்ட்), எம்டெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), எம்டெக் (டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங்) எல்எல்எம் (மேரிடைம் லாஸ்) ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதல் முறையாகத் தேர்வு எழுதுபவராக இருக்க வேண்டும். அதாவது மே 31-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் தேர்வை எழுதுபவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், மேரிடைம் சயின்ஸ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.20 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1,40,500.

நான்கு ஆண்டு பி.டெக் மெரைன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி முக்கியம். அத்துடன், விண்ணப்பதாரர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது.விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம். மாணவிகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.1.43 லட்சம்.

மூன்று ஆண்டு பிஎஸ்சி ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிலையத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு  கட்டணம் ரூ.2.0 லட்சம். வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1.4 லட்சம்.

நான்கு ஆண்டு பிடெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

எல்எல்எம் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை சட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம். கல்வி வளாகத்தில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.60 ஆயிரம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

எம்டெக் நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அல்லது அதற்கு நிகரான பொறியியல் பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

எம்டெக் டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல், மெரைன், நேவல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் 60 சவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம்.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதுவரை காகிதத்தில் விடையளிக்கும் முறையில் நடத்தப்பட்டு வந்த இந்த நுழைவுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். சென்னை, கோவை உள்பட 34 நகரங்களில் ஜூன் 14-ஆம் தேதி 2 மணி முதல் 5 மணி வரை இந்த ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மூன்று மையங்களின் வரிசையை மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் மாதிரித் தேர்வு எழுதிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலை பட்டப் படிப்புகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு ஆகியவை குறித்து பிளஸ் டூ நிலையில் கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும்.

எம்பிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, ஃபைனான்சியல் அக்கவுண்டிங், பொருளாதாரம், கடல்சார் விவகாரங்கள், கணிதம் ஆகியவை குறித்து இளநிலை பட்ட நிலையில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எம்டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, கணிதம், என்ஜினீயரிங் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எல்எல்எம் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, பொதுச் சட்டங்கள் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்படும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.  ஜூலை 14-ஆம் தேதி வாக்கில் கவுன்சலிங் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம். வங்கிச் செலான் மூலம் செலுத்தலாம். இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி

தேதி 20-05-2014

விவரங்களுக்கு: www.imu.edu.in

ராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ். படிக்கலாம்!




புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்லாமல் பி.எஸ்சி. படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் கிடையாது. தங்கும் இடம், உணவு இலவசம்.

நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது புனேயில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். படிப்புக் கட்டணம் எதுவும் இல்லை. அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மகாராஷ்ட்ரா யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில்  105 மாணவர்களும் 25 மாணவிகளும் சேர்க்கப்படுவர். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேசமயம், அந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச்  சேர்ந்த மாணவர்கள் ரேங்க் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். இந்திய பிரஜைகள் மட்டுமே இந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். இந்த ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக்கூடாது என்பது விதி. படிப்புக் காலத்திலும் மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தான் படிக்க வேண்டும். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சேர்த்து சராசரியாக  60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இந்த மூன்று பாடங்களில் ஒவ்வொன்றிலும் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். முதல் தடவையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி  17 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 22 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகவோ  1997-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது.

பி.எஸ்சி. படித்த மாணவர்களும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலப் பாடப்பிரிவுகளை எடுத்து ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி. பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப்பிரிவுகளில் இரண்டுக்குக் குறையாத பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், பி.எஸ்சி. பட்டதாரி மாணவர்களுக்கு 24 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1991-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.

வருகிற மே மாதம் பி.எஸ்சி. இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், பிளஸ் டூ தேர்வு  எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். உடற் தகுதியும் முக்கியம். மனவளம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆன்øலைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.

இப்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் குறித்த விரிவான விவரங்களை விண்ணப்பத்துடன் வழங்கப்படும் கையேட்டிலும் இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச்  சேர்ப்பதற்காக அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் AIPMT  நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். வருகிற மே 4-ஆம் தேதி நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை எழுதாமல் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. அத்துடன், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.  ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் விண்ணப்பித்து, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ள மாணவர்களில் தகுதியுடைய மாணவர்கள், மற்றொரு  எழுத்துத் தேர்வு (ToLER) மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வில் (ToLER) இங்கிலீஷ் லாங்க்வேஜ், காம்ப்ரிஹென்சன், லாஜிக் அண்ட் ரீசனிங் ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து 40 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இத்தேர்வை எழுத 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த எழுத்துத் தேர்வுக்கும் AIPMT தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 250-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்குத் தனியாகவும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்து விட்டால் போதும். கையிலிருந்து பணத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை. விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரலாம். படித்து முடித்த பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வர முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யிலோ சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.12 ஆயிரம் தரப்படுகிறது. கல்லூரிக்கு யூனிபார்மில் வருவதற்கு யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில்  6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த உடைகளை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு 1,250 ரூபாயும் வழங்கப்படும். முடி வெட்ட மாதம் ரூ.100 வழங்கப்படும். இதுதவிர, வாஷிங் அலவன்ஸ், ஸ்டேஷனரி அலவன்ஸ் ஆகியவையும் இன்சூரன்ஸ் வசதியும் உண்டு.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த பிறகு இந்திய ராணுவத்தில் மருத்துவராக நிரந்தரப் பணியில் சேரலாம் அல்லது குறுகிய காலப் பணியில் சேர விரும்புபவர்கள் ராணுவ மருத்துவ  சேவைப் பிரிவில் 7 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். கல்லூரியில் சேரும்போது இதுகுறித்து உத்தரவாதம் அளித்து மாணவர்களும் பெற்றோர்களும் ரூ.25 லட்சத்துக்கான பாண்ட் எழுதித் தர வேண்டும். படிப்பை இடையிலேயே விட்டு விட்டாலோ அல்லது படிப்பை முடித்த பிறகு ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ மருத்துவ சேவைப் பிரிவில் பணி செய்ய மறுத்தாலோ என்ன செய்வது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை புனே ராணுவ மருத்துவக் கல்லூரி மேற்கொள்கிறது.

இங்கு எம்.பி.பி.எஸ். படித்து முடித்த உடன் அந்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் லெப்டினெண்ட் பதவியில் அமர்த்தப்படுவார்கள். இன்டர்ன்ஷிப் முடிந்ததும் கேப்டன் பதவியில் அமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் பணி அனுபவத்திற்குப் பிறகு மேஜராகலாம். 11 ஆண்டுகள் கேப்டனாக இருந்தால் லெப்டினென்ட் கர்னலாகப் பதவி உயர்வு பெறலாம். கேப்டனாக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு மருத்துவப் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் மூன்று ஆண்டுகள் வரை படிக்க, ‘ஸ்டடி லீவ்’ வழங்கப்படும். அந்தப் படிப்பு விடுமுறை காலத்தில் முழு ஊதியமும் வழங்கப்படும். மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு புனே ராணுவ மருத்துவக் கல்லூரி.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17-5-2014
பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி 20-5-2014
விவரங்களுக்கு: www.afmc.nic.in

Wednesday, May 7, 2014

மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே !!!

நிகழ்வு 1 :

ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..

நிகழ்வு 2:

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார். 

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...


கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.


1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.


மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.

2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.

7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.

8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.



Read more: http://www.puriyathaputhir.com/2014/03/blog-post_8026.html#ixzz3113yLjvR

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான்

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..